வீட்டினுள் வந்து, உட்கார்ந்து மாதவன் சங்கருடன் பேச ஆரம்பித்தார். மௌனமாய் உட்கார்ந்திருந்த ரேவதியை "மேடம்" என்று அழைத்து ஓரிரண்டு தடவை பேச்சு தொடங்கினார். ஆனால் அவர் தன்னுடன் நடந்து கொள்ளும் விதம் கண்டு ரேவதிக்கு அவர் தன்னை ஒருவேளை வாழ்க்கையில் முதன் முதலாகவே சந்திக்கிறாரோ என்று தோன்றியது. நமக்கு சரியாக அறிமுகம் ஆகாதவர் ஒருவரிடம் நடந்து கொள்வது போல் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார். மென்மையான குரல், சாந்தமான சுபாவம். ரவீந்திரனுக்கு நேர மாறான நிதான பேச்சு ரேவதியின் மனதில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது.
"இவர் சுபாவம் ரவீந்திரன் மாதிரியே இல்லையே. பெயரும் மாதவன்," என்று ஒரு நொடி நினைப்பாள். அடுத்து கணமே, "இருவருக்குக் தோற்றமும் குரலும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்," என்று குழம்புவாள். ரேவதிக்கு தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது.
சற்று நேரம் கழித்து மாதவன் எந்திரித்து ஷெல்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்க்கப் போனார். பின்னாடியே சங்கரும் சென்று ஒவ்வொரு படத்தையும் விளக்க ஆரம்பித்தான்.
அந்த படங்களில் ரேவதியின் ஒரு படம் கல்லூரி நாட்களின் படம். அதில் ரேவதி மற்றும் ரவீந்திரனுடன் படித்த மாணவ மாணவிகள் இருந்தார்கள். ரவீந்திரன் அந்தப் படத்தில் இல்லை.
மாதவன் தான் ரவீந்திரன் என்ற இருந்தால், அவர் கண்டிப்பாக இந்தப் படத்தை சற்று நேரம் பார்ப்பார் என்ற நினைத்த ரேவதி கவனமாக இருந்தாள். ஆனால் மாதவன் எந்த அக்கறையும் காட்டவில்லை. ரேவதிக்கு மனப்பாரம் நீங்கியது. இவர் இன்னொருவர் என்று அமைதியானாள். பிறகு, "சாப்பாடு ரெடி செய்றேன்" என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
சாப்பாடு தாயாரானதும் சங்கரும் மாதவனும் வந்து டைனிங்க் டெயிபிலில் உட்கார்ந்தார்கள். ரேவதி ஜான்வியையும் சாப்பிட வர கூப்பிட்டார்.
ஜான்வி படி இறங்கி வருவதை மாதவன் பார்க்கும் முறை ரேவதியை மீண்டும் பயமுறுத்தியது.
"ஏன் இவளை இப்படிப் பார்க்கிறார்?" என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.
சாப்பிடும் போது மாதவன் ஜான்வியோடு நிறைய பேசினார். மற்றவர்களை புறகனித்து அவளோடு மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இது ரேவதிக்கு மன உளைச்சல் உண்டாக்கியது.
சாப்பிட முடித்து ஜான்வி மீண்டும் அவள் ப்ராஜெக்டில் வேலை சேய்ய மேலறைக்கு போய்விட்டாள்.
சங்கரும் மாதவனும் டைனிங் டெயிபிலிலேயே பேசிக் கொண்டிருந்து, ரேவதி மனதில் சிந்தனை ஓட்டம் பெருகிக் கொண்டே போயிற்று.
சங்கருக்கு மௌபைலில் ஒரு கால் வரவே அவர் போன் பேச ஆரம்பித்தான். பிறகு ஏதோ முக்கியமான குடும்ப விஷ்யத்தைப் பற்றி அவன் அக்கா ஊரிலிருந்து பேசிக்கொண்டிருப்பதால் எழுந்து மொட்டை மாடிக்குப் போய்விட்டான்.
தனியாக விடப்பட்ட ரேவதியும் மாதவனும் சற்று நேரம் மௌனமாக அமர்ந்தார்கள். பிறகு மாதவன் மெல்லிய குரலில், "ஜான்வி நம்ம பொண்ணா?" என்று கேட்டார்.
இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். இருபது வருடங்களுக்கு முன் அவர்கள் பிரிந்த நாளுக்கு சுமார் ஒரு வாரம் முன்பு ரேவதி ரவீந்திரனிடம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதாக சொன்னாள். அவள் சும்மா கேலியாகச் சொன்னதை அவர் உண்மை என்று நம்பியது அவளுக்கு அப்பொழுது மிகவும் இதமாக இருந்தது. இருவரும் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறார்கள் என்பது அவள் கணவிலும் காணவில்லை. அதனால், அவள் கர்ப்பம் ஆகிவிட்டாளே என்ற கவலை அவருக்கு கொஞ்சம் நாள் இருக்கட்டும் என்று அவருக்கு உண்மை சொல்லாமல் விட்டு விட்டாள் அவள்.
இப்பொழுது இருபது வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கும்போது ரவீந்திரன் மனதில் வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் இளம்பெண் ஒருவேளை தன் மகளாக இருப்பாளோ என்ற மன உளைச்சல் வந்தது.
"நம்ம பொண்ணா இவ?" அவர் மீண்டும் கேட்டார்.
அவரை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் அவர் கம்பீரமான குரலில் சொன்னார், "ரேவதி, நான் உன் ரவீந்திரன் கேட்கிறேன். இவ நம்ம இருவரின் மகளா?"
ரேவதி "இல்லை" என்று சொல்வதற்குள் மாடிப்படியில் பாதங்கள் சத்தம் கேட்டது. சங்கர் "ஸாரி ஸார், ஒரு அர்ஜெண்ட் கால் வந்திருச்சி" என்றபடி கீழை இறங்கினான்.
ரேவதி பாத்திரங்களைக் கழுவும் சாக்கில் சமையலறைக்குள்ளேயே இருந்துவிட்டாள். பிறகு சங்கர் அவளை, "ஸார் போறாங்கம்மா," என்று சொல்லி வெளியே வரச் சொன்னான்.
மாதவன் அவளைப் பார்த்து "தேங்க்யூ மேடம்" என்றபடி காரில் ஏறி போய்விட்டார்.
ராத்திரி படுக்கும்போது "மாதவனுக்கு ஜான்வி ரொம்பு புடிச்சுது இல்லே?" என்றான். "அவர் கல்யாணம் பண்ணிக்கல்லையாம். அதனாலயோ என்னவோ அவருக்கு குழந்தைகள் மேலே பிரியமா இருக்கும்போல தெரியது" என்றவன் சற்று நேரத்தில் தூங்கிவிட்டான். ரேவதி மட்டும் தூங்காமல் கடிகாரத்தின் ஒலி சத்தத்தைக் கேட்டு தன் சென்ற காலத்தின் நொடிகளை எண்ண ஆரம்பித்தாள்.
அடடா.. ரொம்ப விருவிருப்பா போகுதுங்க.. அடுத்த பகுதி போட்டதும் வருகிறேன்.. நன்றி.. :-))
ReplyDeleteநன்றி.
ReplyDeleteஇந்த நாவலை இப்பொழுது wordpressக்கு மாற்றிவிட்டேன்:
http://sikkal.wordpress.com/